சுலோகம்:1
விஶ்வம்தர்பண த்ருஶ்யமான னகரீ துல்யம் னிஜாம்தர்கதம்
பஶ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதானித்ரயா |
யஸ்ஸாக்ஷாத்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மானமே வாத்வயம்
தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே
विश्वं दर्पणदृश्यमाननगरीतुल्यं निजान्तर्गतं
पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया ।
यः साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥१॥
கண்ணாடியில் தோன்றுகின்ற நகரத்திற்கு நிகரான, தன் உள்ளே உள்ள உலகதை எவ்விதம் உறக்கத்தில் (உள்ளே உள்ள உலகம் வெளியில் தோன்றுவதுபோல காணப்படுகிறதோ அவ்விதம்) யார் தன்னிடத்தில் மாயையால் வெளியே உண்டானது போல் பார்த்துக் கொண்டு, ஞானம் வந்தபின் இரண்டற்ற தன் ஆத்மசொரூபத்தை மட்டும் அறிகிறாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).
விளக்கம்:
பத்து சுலோகங்கள் கொண்ட இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில் முதல் மூன்று சுலோகங்கள் தத், த்வம், அஸி என்கிற சொற்கள்(பதங்கள்) முறையே விளக்கப்படுகின்றது. அதாவது ‘தத்வமஸி’ எனும் மஹாவாக்யம் விளக்கப்படுகின்றது. இதில் முதல் சுலோகத்தில் ‘த்வம்’ எனும் சொல் விளக்கப்படுகின்றது.
முகவுரை:
வேதத்தின் சாரம் இரண்டு. வேதத்தின் முதல் பகுதியானது, யாகங்கள் சடங்குகள் தியானங்கள் முதலிய விதவிதமான சாதனைகளைக் கொடுத்து இந்த உலகத்தை சாத்யமாக அடைய வைக்கிறது. இந்த உலகத்திலுள்ள ஏதேனும் ஒரு பொருளையோ அல்லது வேறொரு உலகத்தையோ அடைய வைக்கிறது.
வேதத்தின் இறுதிப் பகுதியான வேதாந்தம் அல்லது உபநிஷத்துக்கள், இந்த உலகம், இதை அனுபவிக்கும் ஜீவன் மற்றும் இவையிரண்டையும் படைத்த ஈஷ்வரன் இவற்றின் தன்மையை விசாரம் செய்கின்றது. மூன்றிற்குமிடையேயான சம்பந்தத்தை விசாரம் செய்து இவற்றின் தத்துவத்தை நிலைநாட்டுகிறது.
=> உபநிஷத் என்ன சொல்கிறது?
முதல் படியாக, இந்த உலகிற்கும் ஜீவனுக்கும் ஈஷ்வரன் காரணம் எனக் கூறுகிறது. அதாவது ஜீவன் காரியம்; ஈஷ்வரன் காரணம். இரண்டாவதாக இந்த ஜீவனும் ஈஷ்வரனும் அடிப்படையில் வேறல்ல; ஒன்று எனச் சொல்கிறது. ஜீவனும் ஈஷ்வரனும் ஐக்கியம் எனக் கூறி உபதேசத்தை முடிக்கிறது.
எப்படி ஒரு பொருள் ஒன்றிலிருந்து இனியொன்றாக வெளிவந்து, பிறகு அதிலிருந்து வேறுபடாததாக இருக்கமுடியும்? அதாவது ஜீவன் ஈஷ்வரனிடமிருந்து தோன்றி, பிறகு எப்படி ஐக்கியமாக, வேறுபடாததாக இருக்கமுடியும்? ஆனால் இது சாத்தியம். உதாரணமாக கடல் மற்றும் அதன் அலைகளை எடுத்துக் கொள்ளலாம். கடல் அலைகளுக்கு மூலகாரணம். அலைகளின் சாரமும் கடலின் சாரமும் ஒன்றே, அது தண்ணீர். ஆகவே நீர் பொதுவான ஆதாரமாக இருப்பதால் கடலும் அலைகளும் ஒன்று எனக் கூறலாம். அலைகள் கடலிலிருந்து தோன்றுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதைப் போலவே கடலும் அலைகளும் ஒன்று என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுபோலவே, ஜீவனும் தன்னைப் பற்றிய சரியான அறிவு இல்லாமல் இந்த உடலோடு அபிமானம் கொள்ளும் போது, ‘நான்(ஜீவன்) ஈஷ்வரனிடமிருந்து தோன்றியவன்’ என்கிறான். பிறகு ஜீவனை ‘அவஸ்தா த்ரய விவேகம்’ உள்ளிட்ட வழிமுறையைப் பயன்படுத்தி விசாரம் செய்து, ‘நான் இந்த சரீரத்திலிருந்து வேறுபட்ட ஆத்மா’ என்று புரிந்து கொள்கின்றான். ஆகவே இந்த ஆத்மாவும் ஈஷ்வரனின் உண்மையான சொரூபமும் ஒன்று என அறிகின்றான். ஈஷ்வரன் ஜகத் காரணம் எனக் கூறுகிறோம். ஜீவனும் ஈஷ்வரனும் ஐக்கியமெனில் இந்த உலகம் ஜீவனிடமிருந்து தோன்றுகிறது எனக் கூறுவதில் விரோதமில்லை. ஜீவனின் ஆதாரமும் ஈஷ்வரனின் ஆதாரமும் ஒன்றுதான் எனில் ஈஷ்வரனிடமிருந்து உலகம் தோன்றுகிறது எனக் கூறுவதும் ஜீவனிடமிருந்து உலகம் தோன்றுகிறது எனக் கூறுவதும் சரியே. இத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஆசிரியர் இந்த ஸ்தோத்ரத்தின் முதல் வரியை ஆரம்பிக்கிறார்.
விளக்கம்:
ஜீவாத்மாவையும் ஈஷ்வரனையும் ஒன்று என கூறும் வாக்கியத்திற்கு ‘மஹா வாக்யம்’ என்று பெயர். முதல் சுலோகத்தில் ஆசிரியர் ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தைக் கூறுகிறார். முதலில் ஜீவனின் தன்மை விசாரிக்கப்பட்டு பின் ஈஷ்வரனுடன் ஐக்கியம் சொல்லப்படுகிறது. ஆகவே முதல் சுலோகம், ‘த்வம் பத சோதன மஹா வாக்யம்’, த்வம் பதம் விசாரம் செய்யப்பட்டு மஹா வாக்யம் பேசப்படுகிறது. இங்கு தக்ஷிணாமூர்த்தி ஈஷ்வரனாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்.
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே
— ஆத்மஞானத்துடன் குருவின் வடிவத்தில் அமர்ந்துள்ள, மாயையை தன்வசம் வைத்தவரான தக்ஷிணாமூர்த்திக்கு இந்த எனது நமஸ்காரத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.
ஶ்ரீ - மாயா சக்தியை தன்வசம் வைத்தவர் அல்லது ஆத்மவித்யையை உடையவர்.
அனைத்து சுலோகங்களிலும் இந்த வரியே கடைசி வரியாக உள்ளது. இந்த வாக்கியமே இதை ஒரு ஸ்தோத்ரமாக காட்டுகிறது. மற்ற மூன்று வரிகளும் இதை ஒரு வேதாந்த கிரந்தமாக காட்டுகிறது.
சாதாரணமாக ஈஷ்வரனை தனியாக அறிமுகப்படுத்தி, ஜீவனை தனியாக அறிமுகப்படுத்தி விசாரம் செய்து ஐக்கியம் என்று சொல்வது வழக்கம். ஆனால் இங்கு சங்கரர், இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியே மாயையின் வசத்தினால் ஜீவனாக இருந்து, பின் ஞானத்தினால் தன் உண்மை சொரூபத்தை புரிந்து கொண்டுள்ளார் என்று இந்த தக்ஷிணாமூர்த்தியுடன் ஜீவனை ஐக்கியப்படுத்துகின்றார். ஆகவே இங்கு மஹா வாக்யம் ‘ஜீவ தக்ஷிணாமூர்த்தி ஐக்கியம்’. ஏற்கனவே நாம் தக்ஷிணாமூர்த்தியை ஈஷ்வரனாக புரிந்துள்ளோம். ஆக, ஜீவ-ஈஷ்வர ஐக்கியம். எப்போதெல்லாம் இவ்வித ஐக்கியத்தை செய்கிறோமோ அப்போதெல்லாம் நாம் ஜீவனின் தன்மையை விசாரித்து சரியாக புரிந்துகொண்டு செய்யவேண்டும். ஜீவனின் தத்துவத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். உடலுடன் புரிந்துகொண்ட ஜீவனைக் கொண்டு ஐக்கியம் சாத்தியமில்லை. இங்கு ஆசிரியர் ஜீவ தத்துவத்தை எப்படி நிர்ணயம் செய்கின்றார்? ஜீவாத்மாவுக்கும்(நமக்கும்) இந்த உலகுக்குமுள்ள ஒருவித சம்பந்தத்தை காட்டுகின்றார்.
அது சத்ய-மித்யா சம்பந்தம். சத்தியமான ஒரு பொருளுக்கும் மித்யாவான ஒன்றுக்கும் உள்ள சம்பந்தம். உதாரணம் மாலைநேர மங்கிய வெளிச்சத்தில் கயிற்றை பாம்பாகப் பார்த்தல். கயிற்றின் மீது பாம்பானது தோற்றிவிக்கப்பட்டுள்ளது. பொய்யாக தோன்றிக்கொண்டிருக்கும் பாம்பிற்கு உண்மையான கயிறு ஆதாரமாக உள்ளது. இதுவே சத்ய-மித்யா சம்பந்தம். ஆக, ஆத்மாவாகிய ஜீவன் சத்யம்; உலகம்(விஸ்வம்) மித்யா. ‘விஸ்வம்’ என்ற சொல்லிற்கு இரண்டு உதாரணங்களை அடைமொழிகளாக ஆசிரியர் இங்கு கொடுக்கிறார்.
(1) த3ர்பண த்3ருஷ்யமான நக3ரீ துல்யம் — முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிகின்ற நகரத்திற்கு சமம். பிரதிபிம்பத்திற்கு சமம்.
கண்ணாடி - ஜீவாத்மா; பிரதிபிம்ப நகரம் - உலகம். இந்த உதாரணத்தை மையமாகக் கொண்டு கீழ்வரும் கருத்துக்களை சேகரிக்கலாம்:
(i) பிரதிபிம்ப நகருக்கு கண்ணாடி ஆதாரம். அதுபோல இவ்வுலகிற்கு ஆத்மா ஆதாரம்; அதிஷ்டானம்.
(ii) கண்ணாடி சுதந்திரமானது(சுதந்திர சத்தா); அதாவது வந்துசெல்கின்ற பிரதிபிம்பங்களால் கண்ணாடியின் இருப்பு பாதிக்கப்படுவதில்லை. பிரதிபிம்பம் கண்ணாடியைச் சார்ந்து இருக்கிறது(பரத சத்தா). எனில், ஆத்மா சுதந்திரமாக இருக்கிறது. இந்த உலகமானது ஆத்மாவைச் சார்ந்து இருக்கின்றது. சத்ய-மித்யா சம்பந்தம்.
(iii) கண்ணாடி ஒன்று. ஆனால் அதில் பிரதிபிம்பிக்கின்ற பொருட்கள் பலவாக உள்ளது. அதுபோல, ஆத்மா ஒன்றாக இருக்கின்றது(ஏகம்). ஆனால் உலகமோ விதவிதமாக இருக்கின்றது(த்வைதம்).
(iv) பிரதிபிம்பிக்கின்ற பொருள் சுத்தமாக இருந்தாலும், அசுத்தமாக இருந்தாலும் அது சுத்தமான இந்த கண்ணாடியைத் தொடுவதில்லை. அது சுத்த சொரூபம்; எதிரில் இருப்பதை அப்படியே பிரதிபிம்பிக்கும். அதுபோல ஆத்மா சுத்த சொரூபம். இந்த உலகின் சுத்த அசுத்தங்கள் ஆத்மாவை பாதிப்பதில்லை.
(v) கண்ணாடி அஸங்க சொரூபம். பிரதிபிம்பிக்கின்ற பொருளோடு எந்த சம்பந்தமுமில்லாமல் உள்ளது. அதுபோல உலகை விளக்கிக் கொண்டுள்ள ஆத்மாவிற்கு உலகுடன் எந்த சம்பந்தமும் உண்மையில் இல்லை. ஆத்மா அஸங்க சொரூபம். உலகம் மித்யாவாக உள்ள காரணத்தினால் அங்கு ஸங்கம் வைக்க எந்தவொன்றும் இல்லை.
(2) நிஜாந்தர்க3தம் விஸ்வம் — தனக்குள்ளே இருக்கின்ற உலகத்துக்கு சமம் இந்த உலகம்; அதாவது கனவு உலகத்தை போன்றது இந்த உலகம். இதிலிருந்து, விழித்து கொண்டிருப்பவன்(விஷ்வன்_waker) - ஆத்மா; கனவுலகம் - நாம் அனுபவிக்கும் இந்த உலகத்திற்கு உதாரணம். இந்த உதாரணத்திலிருந்து கிடைக்கும் அம்சங்கள்:
இதிலும் நாம் ஏற்கனவே (1)-ல் பார்த்த ஐந்து கருத்துக்களும் பொருந்தி வரும். ஆகவே அவைகளல்லாமல் மீதமுள்ள மற்ற கருத்துக்களை இனி விசாரிக்கலாம்.
(i) முன் உதாரணத்தில், கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பத்தை கண்ணாடியே பார்க்க முடியாது. அதில் தோன்றுவதைப் பார்க்க மூன்றாவதான இனியொரு ஆள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த உதாரணத்தில், எவனொருவனிடமிருந்து கனவுலகம் தோன்றுகிறதோ அவனே அதைப் பார்ப்பவனும் ஆகிறான்.
(ii) கண்ணாடியில் பிரதிபிம்பம் தெரிய, வெளியில் உண்மையான ஒரு பொருள் இருக்க வேண்டுமே என்ற கேள்வி வரலாம். ஆனால் இந்த உதாரணத்தில் கனவுலகம் நமது பதிவுகளிலிருந்து (சம்ஸ்காரத்திலிருந்து) தோன்றுவதால், வெளியில் அப்படி ஒரு உலகம் இருக்கவேண்டிய தேவையில்லை. எவ்விதம் கனவில் பொய்யாக ஒரு உலகம் தோன்றுகிறதோ அதுபோல இந்த வெளிஉலகமும் பொய்யானது.
(iii) கனவை உற்பத்தி செய்கிற நானே, அந்த கனவுலகில் ஒரு போலி ‘நான்’-ஐ உற்பத்தி செய்து, ‘நான்’ அனுபவிக்கும் சூழ்நிலையையும் பொருட்களையும் தோற்றுவித்து, அதனால் வரும் இன்ப-துன்பத்தை அனுபவித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒருகால் அங்கு ‘நான்’ என்ற ஒருவன் இல்லையெனில் கனவை ஒரு திரைப்படத்தை போலல்லவா பார்த்துக் கொண்டிருப்போம். இன்பம் ஏது? துன்பம் ஏது? எனவே, கனவில் நானே கனவுலகை அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கும் பொருளாகவும், அனுபவிக்க உதவும் கருவியாகவும் மூன்றாகப் பிரிகின்றேன். திரிபுடி - பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்க்க உதவும் கருவி(இந்திரியங்கள்). கனவில் காணப்படும் திரிபுடி எவ்விதம் பொய்யோ, மூன்றும் ஒருவனிடமிருந்தே(கனவு காண்பவனிடமிருந்தே) உருவானதோ, அவ்விதம் இவ்வுலகமும் ஆத்மாவிடமிருந்து உருவானது; பொய்யானது.
இவ்விதம் கனவானது உன்னிடத்தில் இருப்பது போல் இந்த உலகமே உன்னிடத்தில்தான் இருக்கின்றது என ஆசிரியர் கூறுகிறார். எனில் அதை எனக்குள்ளே தானே பார்க்க வேண்டும்? ஆனால் அனுபவத்தில் அது எனக்கு வெளியில் தெரிகின்றதே! எனில்…..
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூ4தம் யதா2 நித்3ரயா
மாயயா பஹி: உத்பூ4தம் இவ — மாயையினால் வெளியே தோன்றியிருப்பது போல தெரிகின்றது.
விழித்துக் கொண்டிருக்கும் போது கனவுலகம் தோன்றுவதில்லை. கனவுலகம் தோன்ற ஒருவன் முதலில் உறக்கத்தில் விழவேண்டும். இங்கு ‘நித்ரா’ என்பது ஒருவிதமான சக்தி. அது என்ன சக்தியெனில், நித்திரையில் முதலில், ‘நான் விழித்திருப்பவன்’ என்ற அறிவானது மறைக்கப்படுகின்றது. இரண்டாவதாக கனவுலகம் தோன்றுகிறது. ஆகவே ‘நித்ரா’ என்பதற்கு இருவிதமான சக்திகள் உள்ளது. (1) விழித்திருப்பவனை மறைக்கும் சக்தி (2) தனக்குள் ஒரு பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் சக்தி.
யதா2 நித்3ரயா — எப்படி உறக்கத்தினால்
எப்படி உறக்க-சக்தியானது நமக்குள் உள்ள உலகத்தை கனவில் வெளிவந்ததுபோலத் காட்டுகின்றதோ, அப்படி மாயா-சக்தியினால் ஆத்மாவின் உள்ளே இருக்கின்ற உலகம் வெளிவந்ததுபோலத் தெரிகின்றது. எனில் பிரபஞ்சம் உண்மையில் எங்கு உள்ளது?
ஆத்மனி - தன்னிடத்தில்; சச்சிதானந்த சொரூபத்தில்.
பஷ்யந் — பார்த்துக் கொண்டு
தன்னிடத்தில் உள்ள உலகத்தை எவன் மாயையினால் வெளியே உள்ளதாகக் பார்த்துக்கொண்டு…
ய: ஸாக்ஷாத்குருதே ப்ரபோ3த4சமையே ஸ்வாத்மானமேவாத்3வயம்
ப்ரபோ3த4சமையே— (ஆத்மாவை பற்றிய)ஞானம் ஏற்படுகின்ற காலத்தில்,
ஸ்வாத்மானம் அத்3வயம் ஏவ — இரண்டற்ற தன்னை
ய: ஸாக்ஷாத்குருதே — யார் தெளிவாக அறிகிறாரோ
இவ்விதம் அறிகின்ற தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்காரம் செய்கின்றேன் — தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.
=> ‘பஷ்யந்’ என்பதன் விளக்கம்:
கனவில் இருந்த திரிபுடி வேறுபாடுகள், விழித்தவுடன் மறைந்து விஷ்வன் ஒருவனாக மட்டும் எஞ்சுகிறது. ஞானம் வருவதற்குமுன் நமக்கு வெளியே இப்பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றோம். ஆனால் ஞானம் வந்ததற்கு பின்னும் நாம் இவ்வுலகத்தை அனுபவிக்கிறோமே என்றால், அவ்விதம் நடக்கத்தான் செய்யும். அதுதான் கனவுலகிற்கும் நனவுலகிற்குமுள்ள வேறுபாடு. இதையே ‘பஷ்யந்’ எனும் சொல் காட்டுகின்றது. அதாவது அவன் உலகைப் பார்த்துக்கொண்டே தன்னை இரண்டற்றவனாக புரிந்து கொள்கிறான்.
பஷ்யந் — பார்த்துக் கொண்டு.
(1) எந்த ஜீவன் முதலில் அறியாமையினால் தனக்கு வேறானதாகவும் வெளியில் இருப்பதாகவும் உலகத்தைப் பார்த்தானோ, அந்த ஜீவனே ஞானத்திற்கு பிறகு தன்னை இரண்டற்றவனாக உணர்கின்றான். ஆகவே இலக்கணப்படி ‘பஷ்யந்’ என்ற சொல் லக்ஷணார்த்தம்; அல்லது ஹேது என்கிறோம். ஜீவனின் லக்ஷணத்தின் அடிப்படையில் ‘பஷ்யந்’.
(2) கனவு உதாரணத்தில், கனவுலகமானது விழித்தவுடன் மறைந்துவிடுகிறது. கனவைப் போல்தான் இவ்வுலகமும் என கூறும்போது, ஞானம் வந்தவுடன் இந்த உலகமானது மறைந்துவிடுமா? எனில் அவ்விதம் நடப்பதில்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். வானம் நீல வண்ணம் அல்ல என்பதை விக்ஞானத்தின்மூலம் அறிந்த பிறகும் அந்த நீல வண்ணத்தை தொடர்ந்து நம்மால் பார்க்கமுடிகிறது. அதேபோல, சூரிய உதயம் என்பது உண்மையில் நடப்பதில்லை என்ற அறிவிற்கு பிறகும் அந்த அனுபவம் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. ஆகவே மித்யா விஷயத்தில் இருவிதமான அனுபவங்கள் சாத்தியம். ஒன்று பாம்பு-கயிறு உதாரணத்தை போல, அது பொய் என தெரிந்தவுடன் அது மறைந்துவிடும். இனியொன்று கானல்நீரை போல, பொய் என்று தெரிந்தபிறகும் அது அனுபவத்திற்கு தொடர்ந்து இருக்கும். கண்ணை விட்டு மறையாது. தொடர்ந்து இருக்குமெனில் பின் ஞானத்தினால் என்ன பயன்? எனில், ஞானத்திற்கு முன் கானல்நீரினால் தாகம் தணியும் என அங்கு செல்கிறோம். ஆனால் ஞானத்திற்கு பின், தாகத்தை தணிக்க கானல்நீரை நோக்கிச் செல்ல மாட்டோம். அந்த பிரவ்ருத்தி இருக்காது.
இங்கு ‘பஷ்யந்’ என்பது இந்த த்வைத பிரபஞ்சத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்பதை உணர்கின்றான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
சுலோகம்: 2
பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புந:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம் |
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ச்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||
बीजस्याऽन्तरिवाङ्कुरो जगदिदं प्राङ्गनिर्विकल्पं पुनः
मायाकल्पितदेशकालकलना वैचित्र्यचित्रीकृतम् ।
मायावीव विजृम्भयत्यपि महायोगीव यः स्वेच्छया
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥२॥
விதையில் உள்ள முளைபோல் இந்த உலகம் படைப்பிற்கு முன் வேற்றுமையற்றதாக இருந்து பின் மாயையால் கல்பிக்கப்பட்ட இடம், காலம் முதலியவற்றின் சேர்க்கையால் ஏற்பட்ட வேற்றுமையால் பலவகைப்பட்டதாக செய்யப்பட்டது. (இப்படியான உலகை) யார் மாயாவியைப்போலவும் பெரிய யோகியைப் போலவும் தன் ஸங்கல்பத்தினால் படைத்தாரோ அந்த அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).
விளக்கம்:
‘தத்’ பத விசாரம் நடைபெற இருக்கின்றது; ஈஷ்வர விசாரம். ஈஷ்வரனுக்கும் இவ்வுலகுக்கும் எப்படிப்பட்ட சம்பந்தம் உள்ளது என காட்டுகிறார் ஆசிரியர். முதலில் சில தவறான கருத்துக்களை எடுத்துக் கொண்டு அது எவ்விதம் தவறு என்பதை விசாரம் செய்வோம்.
சிலர், ஈஷ்வரனை ஜகத் காரணம் எனக் கூறினாலும் ஈஷ்வரன் வேறு இந்த உலகம் வேறு என்கிறார்கள். ‘ப்ருதக் ஸத்தா’ - முற்றிலும் வேறு வேறு இருப்பு.
சிலர் ஈஷ்வரனை ஜகத் காரணம் எனக் கூறி, உலகமானது ஈஷ்வரனின் அங்கமாக ஒரு உறுப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் இந்த உலகம் என்று ஒன்று கிடையாது; சூன்யம் எனச் சொல்கிறார்கள். சிலர் இந்த உலகம் சுபாவமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் ‘ஜகத் சிருஷ்டம்’ - அதாவது படைக்கப்பட்டது என கூறுகிறார்கள். ஆனால் சங்கரர் இங்கு ‘ஜகத் கல்பிதம்’ — ஏற்றிவைக்கப்பட்டது என்கிறார். இதுவே வேதாந்திகளான நம்முடைய வாதம். இதை சாஸ்திரம் படிப்படியாகக் கற்பிக்கிறது.
முதல் படியிலேயே ‘இவ்வுலகம் பொய்’ என கூறினால், அதிஷ்டானத்தை அறியாத காரணத்தினால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அது சில படிமுறைகளைக் கையாளுகிறது.
முதலில் சாஸ்திரம், இந்த ஜகத் படைக்கப்பட்டதாகவே எடுத்துகொள்கிறது. உலகம் படைக்கப்பட்டது எனில் படைத்தவன் யார்? அவருக்கு ஈஷ்வரன் என்ற பெயரைக் கொடுக்கின்றது. முதல்படி, ‘ஜகத் காரியம்; ஈஷ்வரன் காரணம்’.
அடுத்த கேள்வி: எப்படிப்பட்ட காரணம்? பொதுவாக இருவகை காரணங்கள் உள்ளன.
(i) உபாதான காரணம்; சிருஷ்டி, ஸ்திதி, லய காரணம். எ.கா., பானைக்கு களிமண்.
(ii) நிமித்த காரணம்; சிருஷ்டி மாத்ர காரணம். தோற்றத்திற்கு மட்டும் காரணமாக இருப்பது - எ.கா., குயவன்.
இவ்வுலகிற்கு ஈஷ்வரனே உபாதான காரணம் மற்றும் நிமித்த காரணம் என்கிறது சாஸ்திரம். எதை நமக்கு புகட்ட சாஸ்திரம் இவ்விதம் சொல்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்தில் பானையை நாம் கையாளுகிறோம் என்றால் உண்மையில் அதன் உபாதான காரணமான களிமண்ணையே கையாளுகிறோம். அதுபோல, ஈஷ்வரனே இவ்வுலகின் உபாதான காரணம் எனில், இவ்வுலகை கையாளும்போது ஈஷ்வரனைத்தான் கையாளுகின்றோம். ஆகவே ஈஷ்வரனே இவ்வுலகமாகத் தோன்றுகின்றார். இந்த ஈஷ்வர திருஷ்டிக்காக இந்த உதாரணம் சாஸ்திரத்தினால் கொடுக்கப்படுகிறது. மற்றபடி இந்த உதாரணத்தை நீட்டித்தால், களிமண்ணானது சிறிதேனும் மாற்றத்திற்குட்பட்ட பின்னரே பானையாக மாறுகிறது. அதுபோல ஈஷ்வரன் மாற்றத்தை அடைகிறாரா? எனில், அப்போது சாஸ்திரம் நம்மை அடுத்த படிக்கு இட்டுச் செல்கிறது.
ஈஷ்வரனிடம் இரண்டு தத்துவங்கள் உள்ளன. ஒரு தத்துவம் - ப்ரம்ம தத்துவம்; சைத்தன்ய தத்துவம்; ஞானம். இதன் அடிப்படையில் அவர் இவ்வுலகிற்கு நிமித்த காரணமாக இருக்கின்றார். ஆகவே அவர் மாற்றமடையாமல் சங்கல்பத்தினால் இதை படைக்கின்றார்.
இனியொரு தத்துவத்தை சாஸ்திரம் ‘மாயா’ என அறிமுகப்படுத்தி, அது இவ்வுலகிற்கு உபாதான காரணமாகின்றது எனக் கூறுகிறது. ஆகவே ஈஷ்வரனின் ப்ரம்ம தத்துவம் நிமித்த காரணமாகவும், மாயா தத்துவம் உபாதான காரணமாகவும், அவர் தன்னளவில் மாற்றமடையாமல் இவ்வுலகை படைக்கின்றார்.
ஒரு பொருள் தன்னளவில் மாற்றமடையாமல் ஒன்றிற்கு உபாதான காரணமாக இருக்கின்றது எனில், அது அப்பொருளுக்கு 'விவர்த உபாதான காரணம்' என சாஸ்திரம் கூறுகின்றது. இருவகையான உபாதான காரணம்:
(1) முழுமையாக மாற்றமடைந்து இனியொன்றாக, காரியமாக மாறுவது. எ.கா., பால்-தயிராக மாறுதல்
(2) தான் மாற்றமடையாமல் இனியொன்றிற்கு உபாதான காரணமாக இருத்தல். எ.கா., கயிறு-பாம்பு
இந்த இரண்டாவது உதாரணத்தில், தான் மாற்றத்தை அடையாமல் உபாதான காரணமாக இரு காரியமானது மித்யா; அதாவது உண்மையில் இல்லை. கயிற்றில் பாம்பு மித்யா. அவ்விதமே ஈஷ்வரன் மாறாமல் இவ்வுலகிற்கு உபாதான காரணமாக இருக்கிறார் எனில் காரியமான இந்த ஜகத் மித்யா; உண்மையில் அது அங்கு இல்லை - கல்பிதம். இதுவே இரண்டாம் படி.
பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
முதல்படியை உதாரணத்துடன் விளக்குகிறார் ஆசிரியர். தோன்றுவதற்குமுன் விதைக்குள்(பீஜஸ்யாந்த) வேறுபாடில்லாமல் இருந்த செடிமுளைகளைப்போல(அங்குர இவ), விகல்பத்துடன், வேறுபாடுகளுடன் தோன்றிக்கொண்டிருக்கும் இந்த உலகமானது, இது தோன்றுவதற்கு முன்(பிராங்) வேறுபாடில்லாமல்(நிர்விகல்பம்) இருந்தது. மீண்டும் சிருஷ்டி காலத்தில்(புன:) தோற்றத்திற்கு வந்தது. இங்கு புன: என்ற சொல், சிருஷ்டி ஆதி-அந்தம் அற்றதாக மற்றும் அவ்யக்த-வ்யக்த ரூபமாக மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதாவது முதல் சிருஷ்டி என்பது கிடையாது.
இதில் விதை உதாரணத்தில், விதையே செடிமுளைகளாக மாறுகிறது. அதுபோல ஈஷ்வரன் மாற்றமடைந்து சிருஷ்டியை படைக்கிறாரா என்ற கேள்வி வரும்போது…
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயையினால் ஏற்றிவைக்கப்பட்ட, கற்பனை செய்யப்பட்ட(மாயா கல்பித) இந்த ஆகாசம் மற்றும் கால(தேஷகால) சம்பந்தத்தினால்(கலனா) விதவிதமாக (வைசித்ர்ய) வரையப்பட்டது(சித்ரீக்ருதம்).
மாயையினால் இவ்வுலகம் தேசகாலத்தில் விதவிதமாக வரையப்பட்டதாக உள்ளது.
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ச்வேச்சயா
படைத்தல் என்ற செயலுக்கு விதவிதமான காரகங்கள்(கருவி, உழைப்பு, இடம், யாருக்கு …) தேவை. ஈஷ்வரனுக்கு இதுபோன்ற காரகங்கள் என்னென்ன என்பதற்கு இங்கு உதாரணங்கள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று இந்திரஜாலம் செய்யும் மாயாவி. அவன் நமது இந்திரியங்களுக்கு பொய்யான ஒரு விஷயத்தை காட்டுகிறான். இனியொன்று யோகி. அவன் யோகசக்தியினால் சங்கல்பத்தினாலேயே ஒன்றை படைக்கிறான்; விஸ்வாமித்திரர் சொர்க்கத்தை உருவாக்கியதைப் போல. இவ்விதத்தில் ஈஷ்வரன் எந்தவிதமான காரகங்களும் இல்லாமல் சங்கல்பத்தினாலேயே இவ்வுலகத்தைப் படைக்கின்றார்.
இந்த மாயாவிகள் பொருட்களை காண்பிப்பதைப் போல(மாயாவி இவ), பெரிய யோகியைப் போல(மஹா யோகி இவ) வெறும் இச்சையினால், சங்கல்பத்தினால் மட்டும் (ஸ்வ இச்சயா)
இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்படுகின்றது (விஜ்ரும்பயதி).
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே
இப்படிப்பட்ட ஈஷ்வரனாக இருக்கின்ற தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.
முதல் சுலோகத்தின்படி, மித்யா பிரபஞ்சத்தின் ஆதாரம் ஜீவாத்மா. இரண்டாம் சுலோகத்தின்படி, மித்யா பிரபஞ்சத்தின் ஆதாரம் ஈஷ்வரன். எனில், ஜீவனும் ஈஷ்வரனும் உண்மையில் வேறல்ல. அப்படியெனில் இந்த மித்யா பிரபஞ்சத்தில் ப்ரம்மன் எப்படி நுழைந்துள்ளது? ஆதாரமாக இருக்கின்ற ஜீவனும், ஈஷ்வரனும் எப்படி மித்யா உலகில் நுழைந்தார்கள்?
----------------------------------------------------------------------------------------------
சுலோகம்: 3
யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்கல்பார்தகம் பாஸதே
ஸாக்ஷாத்தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாஶ்ரிதான் |
ய: ஸாக்ஷாத்கரணாத்பவேன்ன புரனாவ்றுத்திர்பவாம்போனிதௌ
தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே ||
यस्यैव स्फुरणं सदात्मकमसत्कल्पार्थकं भासते
साक्षात्तत्त्वमसीति वेदवचसा यो बोधयत्याश्रितान् ।
यत्साक्षात्करणाद्भवेन्न पुनरावृत्तिर्भवाम्भोनिधौ
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥३॥
எந்த ஆத்மா பிரகாசம் இல்லாத பொருளுக்கு நிகரான உலகத்தில் ஸத் ரூபமாக (= ஸத் ஸத் என்று) விளங்குகிறதோ, எவர் தன்னை அண்டியவர்களை தத்த்வமஸி (= நீ அதுவாக இருக்கிறாய்) என்ற வேத வாக்கியத்தால் நேரடியாக உபதேசிக்கிறாரோ, எந்த தத்துவத்தை அறிவதால் துயரக்கடலிற்கு மீண்டும் திரும்புதல் இல்லையோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).
=> முகவுரை:
‘அஸி பத விசாரம்’ இங்கு நடைபெறுகிறது; அதாவது ஐக்கியம் செய்யப்படுகிறது. ஒரு காரணம்(களிமண்), காரியமாக(பானையாக) மாறும்போது அதனுடன் இரு விஷயங்கள் புதிதாக சேர்ந்துள்ளன என்று பொருள்:
(1) நாம[பெயர்] (2) ரூபம்[வடிவம்].
அடுத்ததாக ஒரு பொருள் இருக்கின்றது எனக் கூறும்போது அது இரு அம்சத்தை குறிக்கிறது: (i) நாமரூப அம்சம் (ii) அதிஷ்டான அம்சம். உதாரணமாக, ‘பானை இருக்கின்றது’ எனக் கூறும்போது,
பானை இருக்கின்றது —> பானை(நாம மற்றும் ரூபம்);
இருக்கின்றது (ஸத் அம்சம்)
இதிலுள்ள அந்த ‘ஸத்’ அம்சமானது காரணத்தினால்(cause) காரியத்திற்கு(effect) கிடைத்துள்ளது. ஆகவே காரணமானது காரியத்தில் ‘ஸத்’ ரூபமாக வியாபித்துள்ளது.
காரணம் + நாமரூபம் = காரியம்
நாமரூபம் என்பது உண்மையில் எந்தப் பொருளும் இல்லை. ஆகையினால் அது ‘அஸத்’-க்கு சமம்; இல்லாததற்கு சமம்(கல்பம்).
விளக்கம்:
யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்கல்பார்தகம் பாஸதே
ஸத் சொரூபமாக இருக்கின்ற(ஸதாத்மகம்) எந்த ஆத்மாவினுடைய/பரம்பொருளினுடைய வெளிப்பாடு(யஸ்ய ஏவ ஸ்புரணம்) அசத்திற்கு சமமான நாமரூபமாக இருக்கின்ற அர்த்தத்திற்குள் சென்று(அசத் கல்பார்தக3ம்) நமக்கு தெரிகின்றது/விளங்குகின்றது(பாஸதே).
ஆத்மாவின் ஸத் சொரூபமானது, அஸத்திற்கு சமமான நாமரூபத்துடன் இருக்கின்ற ஒரு பொருளுக்குள் ‘ஸத்தாக’ சென்றுள்ளது. ஆகவே ஸத் சொரூபமான பரப்ரம்மன் இந்த பொய்யான உலகத்தில் ‘இருத்தல்_ ஸத்’ என்ற சொரூபமாக உள்ளே நுழைந்துள்ளது.
ப்ரம்மம் தான் பொய்யான இந்த முழு பிரபஞ்சத்திலும் சத் சொரூபமாக இருக்கின்றது.
ஸாக்ஷாத்தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாஶ்ரிதான் |
எந்த பரம்பொருள் இந்த பொய்யான பிரபஞ்சத்தில் ‘ஸத்தாக’ வியாபித்துள்ளதோ அந்த பரம்பொருளே(தத்) நீயாக இருக்கின்றாய்(த்வம் அஸி) என்று நேரடியாக(இதி சாக்ஷாத்) எந்த தக்ஷிணாமூர்த்தியானவர் உபதேசம் செய்கிறாரோ(ய: போதயதி) வேத வாக்கியத்தை (வேத வசஸா) தன்னிடம் வந்தவர்களுக்கு(ஆச்ரிதான்)
ஸாக்ஷாத் - சிஷ்யன் குருவின் உபதேசத்தை இந்திரியத்தினாலோ, அல்லது அனுமானத்தினாலோ புரிந்து கொள்ளாமல், தானாக(தனது சுயமாக) புரிந்து கொள்ளுதல் நடைபெறுகிறது — அபரோக்ஷ ஞானம். எந்தவிதமான பிரமாணமும் இல்லாமல் நான் என்னை ஸ்வயமாக புரிந்து கொள்கிறேன்.
வேத வசஸா - குருவானவர் ச்ரோத்ரியனாக இருக்கின்றார். பிரமாணத்தின் அடிப்படையில் இந்த உபதேசத்தை செய்கின்றார் என்பது பொருள்.
ஆச்ரிதான் - தகுதியுடையவர்களுக்குதான் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்பதாகத் தன்னை வந்தடைந்த சிரத்தையுடைவர்களுக்கு அவர் இதை போதித்தார் என்பது காட்டப்படுகிறது.
ய: ஸாக்ஷாத்கரணாத்பவேன்ன புரனாவ்றுத்திர்பவாம்போனிதௌ
இந்த ஞானத்தின் பலன் கூறப்படுகிறது.
எந்த தத்துவத்தை நேரடியாக, தெளிவாக அறிந்துகொண்டால்(ய: சாக்ஷாத் கரணாத்) சம்சாரக் கடலில் (பவ அம்போனிதௌ) மீண்டும் வருதல் என்பது கிடையாது; ஜன்மம் கிடையாது (புன: ஆவ்ருத்தி: ந பவேத்)
இந்த ஞானத்தினால் மீண்டும் பிறத்தல் கிடையாது. ஆகவே ஜீவன் முக்திக்கு பின்னர் உடலை விடும்போது கடைசி மரணம் நடக்கிறது; அதாவது அவர்கள் மோக்ஷத்தை அடைகிறார்கள்.
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே
இப்படிப்பட்ட ஈஷ்வரனாக இருக்கின்ற தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
சுலோகம்: 4
நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீபப்ரபாபாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹிஸ்பந்ததே |
ஜானா மீதி தமேவ பாந்தமனுபாத்யேதத் ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||
नानाच्छिद्रघटोदरस्थितमहादीपप्रभा भास्वरं
ज्ञानं यस्य तु चक्षुरादिकरणद्वारा बहिः स्पन्दते ।
जानामीति तमेव भान्तमनुभात्येतत्समस्तं जगत्
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥४॥
பல துவாரங்களைக் கொண்ட பானைக்குள் வைக்கப்பட்ட பெரிய தீபத்தின் ஒளிபோன்று எந்த ஆத்மாவினுடைய ஞானமானது கண் முதலிய புலன்களின் வழியாக வெளியே செல்கிறதோ, அந்த தானாக விளங்குகின்ற(ஆத்ம தத்துவத்தை) தொடர்ந்து இந்த முழு உலகமும் நான் அறிகிறேன் என்று அறிகிறதோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).
=> முகவுரை:
முதல் மூன்று சுலோகத்தில் சாரம் முடிவடைகிறது. ஏற்கனவே பார்த்த கருத்துக்களில் ஏதேனும் ஒன்றின் விளக்கம் இனிவரும் சுலோகங்களில் வரவுள்ளது. இந்த சுலோகத்தில்,
(1) ஸத் சொரூபமும் சித் சொரூபமும் வேறல்ல என காட்டப்படுகிறது. ‘ஸதேவ சித்; சிதேவ ஸத்’.
(2) ப்ரம்மத்தின் ஞானம்தான் ஜகத்திலும் ஞானமாக இருக்கின்றது. ‘ஆத்ம ஸத்தா ப்ரகாசாப்யாம் ஜகத: ஸத்தா ப்ரகாசெள’ - ஆத்மாவின் ஸத் மற்றும் பிரகாசத்தினால் ஜகத்திற்கு ஸத் மற்றும் பிரகாசம் வருகின்றது.
(1) எப்படி ஸத்-தையும், சித்-தையும் பிரிக்க முடியாது?
ஒரு பொருள் இருக்கின்றது என்று சொல்லவேண்டுமெனில் அதனோடு ஞானம் என்பதை சேர்க்காமல் அதனுடைய இருத்தலே சித்திக்காது — ஞானாத் பா4வ சித்3தி4: — அறிவினால் ஒரு பொருளின் இருத்தல் ஏற்படுகின்றது; அப்பொருள் அறிவிற்கு விஷயமாகும்போதே அதன் இருப்பும் நிகழ்கின்றது. எது இருக்கின்றதோ(அஸ்தி) அது விளங்கவேண்டும்(பா4தி). விளங்கவேண்டுமெனில் அது அறிவோடு சம்பந்தப்பட வேண்டும். ஆகவே ஸத் வேறு சித் வேறு அல்ல.
(2) ப்ரம்மத்தின் ஸத் சொரூபம் பிரஞ்சம் முழுதும் வியாபித்துள்ளது என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். மேலும் ஸத்-தையும், சித்-தையும் பிரிக்க முடியாது எனவும் பார்த்தோம். எனில், பிரபஞ்சம் முழுதும் ப்ரம்மத்தின் சித் சொரூபமும் இருக்கவேண்டும். சித் சொரூபமும் இருக்கிறதெனில் அது எப்போதும் விளங்கிக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆனால் நம் அனுபவமானது அதற்கு முரணானதாக உள்ளது. தூங்கும்பொழுது இவ்வுலகம் இருப்பதில்லையே, சென்றுவிடுகிறதே; ஜடமாக இருக்கின்றதே; போன்ற சந்தேகம் வரும்பொழுது இந்த சுலோகம் அதற்கு பதில் சொல்கிறது.
எவ்விதம் பரமாத்மாவின் ஸத்-தை வெளிப்படுத்த இவ்வுலகிற்கு நாமரூபம் தேவைப்படுகிறதோ, அவ்விதம் ஆத்மாவின் ஞானசொரூபம் வெளிப்பட வேண்டுமென்றால் மனம் என்ற கருவியின் உதவி தேவை. மனதினுடைய உதவி ஆத்மாவை விளக்குவதற்காக அல்ல; மனதின் உதவி ஆத்மாவின் ஞானசொரூபத்தை, சைத்தன்யத்தை வெளிப்படுத்துவதற்காக.
இக்கருத்தை இங்கு ஆசிரியர் ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்குகிறார். ஐந்து துவாரங்களைக் கொண்டு பானை ஒன்று இருட்டறையில் வைக்கப்பட்ட தீபத்தின் மேல் மூடப்பட்டுள்ளது. தீபத்தின் ஒளியானது இந்த துவாரங்களின் வழியாக வெளிவந்து அந்த அறையிலுள்ள பொருட்களைப் பிரகாசிக்கிறது. இதில் இந்த பானை நம் உடலையும், ஐந்து துவாரங்கள் நமது புலன்களையும், தீபம் ஆத்மாவையும்(சைத்தன்யத்தையும்) குறிக்கிறது. அதாவது பானைக்குள் இருக்கின்ற தீபம் ஓட்டைகளின் வழியாக வெளிவிஷயத்தை பிரகாசப்படுத்துவது போல, இந்த உடலிலுள்ள ஆத்மா, மனதின் மூலமாக, புலன்களின் மூலமாக வெளிவிஷயத்தை பிரகாசிக்கின்றது. உலகத்திற்கென்றோ, மனதிற்கென்றோ அல்லது புலன்களுக்கென்றோ விளங்குதல் என்ற தன்மை கிடையாது. இவைகளின் விளங்குதல் ஆத்மாவின் பிரகாசத்தை சார்ந்தது.
விளக்கம்:
நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீபப்ரபாபாஸ்வரம்
விதவிதமான துவாரங்கள் கொண்ட பானையின்(நானாச்சித்ர கட) மத்தியில் இருக்கின்ற (உதர ஸ்தித) பெரிய தீபத்தினுடைய ஒளியின் வெளிப்பாடு (மஹா தீப ப்ரபா பாஸ்வரம்),
இரண்டாம் வரியில் உள்ள ஞானம் என்பதற்கு இந்த முதல் வரி அடைமொழி.
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹிஸ்பந்ததே
இப்படிப்பட்ட ப்ரம்மத்தினுடைய/தக்ஷிணாமூர்த்தியினுடைய ஞானம்(ஞானம் யஸ்ய) கண் முதலிய கரணங்களின் வழியாக வெளியே செல்கின்றது (சக்ஷுராதி கரண த்வாரா பஹி: ஸ்பந்ததே); எந்த ஆத்மாவினுடைய ஞானம்(மனதில் பிரதிபிம்பித்து இந்திரியங்களின் வழியாக) வெளியே சென்று அனைத்தையும் பிரகாசிக்கிறதோ என்பது பொருள். இருவகை ஞானமுண்டு. எல்லா இடத்திலும் எப்போதுமிருக்கின்ற ஞானம் எங்கும் செல்வதில்லை. இங்கு பேசப்படுகின்ற ஞானம், பிரதிபிம்ப ஞானம்.
ஜானா மீதி தமேவ பாந்தமனுபாத்யேதத் ஸமஸ்தம் ஜகத்
நான் அறிகின்றேன் என்று (ஜானாமி இதி) யாருடைய ஞானத்தினால்(தம் பாந்தம்) இந்த பிரபஞ்சமுமே விளங்குகின்றதோ (ஸமஸ்தம் ஜகத் அனுபாதி)
எந்தவொரு ஞான சொரூபத்தினால் ‘நான் அறிகின்றேன்… அறிகின்றேன்…’ என்று சொல்கிறோமோ அதைத் தொடர்ந்து இவ்வுலகம் விளங்குகின்றது.
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே
இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.
-----------------------------------------------------------------------------------------------
சுலோகம்:5
தேஹம் ப்ராணமபீம்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச ஶூன்யம் விது:
ஸ்த்ரீ பாலாம்த ஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராம்தாப்றுஶம் வாதின: |
மாயாஶக்தி விலாஸகல்பித மஹாவ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே ||
देहं प्राणमपीन्द्रियाण्यपि चलां बुद्धिं च शून्यं विदुः
स्त्रीबालान्धजडोपमास्त्वहमिति भ्रान्ता भृशं वादिनः ।
मायाशक्तिविलासकल्पितमहाव्यामोहसंहारिणे
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥५॥
குழந்தைகள், சிறு-பெண்கள், குருடர்கள், மூடர்கள் இவர்களுக்கு நிகரான மிகவும் குழப்பம் அடைந்த வாதம் புரிபவர்கள், உடலையும் பிராணனையும் இந்திரியங்களையும், சலனமான புத்தியையும், சூன்பத்தையும் ‘நான்’ என்று(= ஆத்மா என்று) அறிந்து கொண்டிருக்கிறார்கள். மாயாசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பெரிய மயக்கத்தை அடியோடு அழிக்கின்ற அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).
=> முகவுரை:
இங்கு இரண்டு கருத்துக்கள் அடங்கியுள்ளது:
(1) அனாத்ம நிஷேத:, எனக்கு புரம்பான ஒன்றை அதாவது அனாத்மாவை நீக்குதல். மோக்ஷம் என்பது இரண்டு படியில் அடையப்படுகிறது:
(i) ‘நான்’ என்ற ஆத்மாவின் தன்மையை அறிவது.
(ii) ‘நான் யார் அல்ல’ என்பதை தெரிந்து கொள்வது.
இதில் எவைகளெல்லாம் நான் அல்ல என்ற அறிவு இங்கு முதல் வரியில் விளக்கப்படுகிறது. அனாத்மா எனில் எனக்கு அந்நியமானது; நான் அல்லாதது என்பது பொருள். நாம் எவைகளிடத்திலெல்லாம் ‘நான்’ என்ற புத்தியை வைக்கிறோமோ, ஆத்மா என்று தவறாக நினைக்கிறோமோ அதை, அதாவது அனாத்மாவை சாஸ்திரம் ஐந்தாகப் பிரித்துள்ளது. அவைகள் பஞ்ச கோஷம் எனப்படும். அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விக்ஞானமய கோஷம் மற்றும் ஆனந்தமய கோஷம். இவைகளிலிருந்து ‘நான்’ என்ற புத்தியை நீக்க சாஸ்திரம் பிரயத்தனம் செய்கிறது. இங்கு முதலிரண்டு வரிகள் அனாத்மாவிலிருந்து நம்மை நாம் பிரித்துக் கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.
(2) குரு உபதேஷாத் மோஹ நிவ்ருத்தி:, குருவினுடைய உபதேசத்தினால்தான் இந்த அனாத்ம மயக்கம் அல்லது மோஹம் நீங்கும்.
விளக்கம்:
தேஹம் ப்ராணமபீம்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச ஶூன்யம் விது:
ஸ்த்ரீ பாலாம்த ஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராம்தாப்றுஶம் வாதின: |
அன்னமய கோஷம் அல்லது ஸ்தூல சரீரத்தை(தேஹம்), பிராணமய கோஷம் அல்லது பிராணனை, பசி மற்றும் தாகத்தை(பிராணம்), மனோமய கோஷம் அல்லது மன மற்றும் இந்திரியங்களை (இந்த்ரியாணி) விக்ஞானமய கோஷம் அல்லது சலனமான புத்தியை/க்ஷணிக விக்ஞானத்தை(சலாம் புத்திம்) நான் என்று (அஹமிதி) ஆத்ம-அனாத்ம விஷயத்தில் குழம்பியவர்கள்(ப்ராந்தா) மிக உறுதியாக, ஆழமாக வாதம் புரிகிறார்கள்(ப்ருசம் வாதின:). மேலும் சிலர் தங்களை சூன்யம் என்றும் அறிகிறார்கள்(சூன்யம் விது:), வாதிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சில உதாரணத்தை ஆசிரியர் கூறுகிறார்.
ஜடத்திற்கு சமமானவர்கள்(ஜட உபமா:), குருடர்களுக்கு சமமானவர்கள்(அந்த உபமா:) உறவுகளாலும் உணர்வுகளாலும் பந்தப்பட்டுள்ள கள்ளமற்ற சிறுமியர்க்கு சமமானவர்கள்(ஸ்த்ரீ பாலா) இப்படிப்பட்டவர்களாக இந்த அக்ஞானிகள் மேற்கூரிய விதத்தில் வாதம் செய்கிறார்கள்.
மாயாஶக்தி விலாஸகல்பித மஹாவ்யாமோஹ ஸம்ஹாரிணே
இரண்டாவதாக கூறப்பட்ட ‘குரு உபதேஷாத் மோஹ நிவ்ருத்தி:’ என்ற கருத்து வருகிறது. மறைத்தல் மற்றும் தோற்றுவித்தல் எனும் சக்தியையுடைய மாயையின் (மாயாசக்தி) விளையாட்டால்/செயல்பாட்டால்(விலாச) பொய்யாக தோற்றுவிக்கப்பட்ட(கல்பித) பெரிய மயக்கத்தை(மஹா வ்யாமோஹ) அதாவது முதலிரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்ட மோஹத்தை அல்லது மயக்கத்தை(வ்யாமோஹ) நாசம் செய்பவரே(ஸம்ஹாரிணே)
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே
இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.